சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் பயண தேவையை பெரிதும் பூர்த்தி செய்வதில் மின்சார ரயில்களுக்கு பெரும் பங்கு உண்டு. பெரும்பாலான பயணிகள் புறநகர் மின்சார ரயில்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வசதிகள் இல்லை என்பதே நீண்ட காலமாக பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் ரயில் நிலையத்தில் வைத்தே வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ரயில் பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த மாதம் 19ஆம் தேதி இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ராஜேஸ்வரி என்ற பெண் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் அந்த பெண் உயிரிழந்தார். பயணிகள் முன்பாக நடத்தப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதல் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயிலுக்கு காத்திருந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். செங்கல்பட்டு செல்வதற்காக ரயிலுக்கு காத்திருந்த தமிழ்ச்செல்வியை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பிய தமிழ்செல்வி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். ரயில் பயணியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.