உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஏற்கனவே பல நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டில் ஸ்மார்ட்போன் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் Memory Chip பற்றாக்குறையே இந்தக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
சந்தை ஆய்வு நிறுவனமான ‘ட்ரெண்ட்ஃபோர்ஸ்’ (TrendForce) வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் விலைகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.4,000 வரை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் வேகமான செயல்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் எல்பிடிடிஆர் 4 எக்ஸ் (LPDDR4 X) மற்றும் என்.ஏ.என்.டி (NAND) ஃபிளாஷ் மெமரி சிப்களின் விநியோகத்தில் சமீப காலமாகப் பெரிய அளவில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கேற்ற அளவில் இந்த சிப்புகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விநியோகச் சங்கிலியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு :
சிப்களின் விநியோகம் குறைந்ததால், அதற்கான விலையும் சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் தயாரிப்புச் செலவுகளும் அதிகமாகியுள்ளன. இந்த அதிகரித்த செலவினத்தை சமாளிப்பதற்காகவும், லாப வரம்பைப் பராமரிப்பதற்காகவும், பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த விலை உயர்வு, மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் முதல் அனைத்து வகையிலான சாதனங்களிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டில் புதிய ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள், விலை உயர்வுக்கு முன்னதாகவே தங்களுக்குத் தேவையான சாதனங்களை வாங்கிக் கொள்ள இது ஒரு சமிக்ஞையாக இருக்கலாம்.
Read More : மத்திய அரசின் ஜாக்பாட் வருமான திட்டம்..!! மாதம் ரூ.10 லட்சம் சம்பாதிக்கலாம்..!! பின்னணி என்ன..?



