Southwest Airlines விமானத்தில் பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணியின் தலை முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் அதீத மது போதையில் இருந்த நபர் ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் ஓடும் விமானத்தில் ஒரு பயணி திடீரென அவசரகால கதவை திறக்க முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை விமான ஊழியர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தியதால், அந்த விமானமும் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டது. இந்த சூழலில், அண்மையில் விமானப் பயணி ஒருவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள லா குவார்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த Southwest Airlines விமானத்தில் நடந்த சம்பவம் ஒன்று விமானப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில், 32 வயதான லீனா பேரி என்ற பெண், விமானத்தில் ஏறிய பிறகு அருகில் இருந்த பெண் பயணியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் செய்துள்ளார். இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் மற்றும் சில பயணிகள் அவரை சமாதானப்படுத்த முயன்ற போதும், லீனா பேரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கருப்பினம் சார்ந்த அவமதிப்பு வார்த்தைகள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தபோது சில பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக @CollinRugg என்ற பயனர் வெளியிட்ட வீடியோவில், லீனா பேரி ஒருவரின் தலைமுடியை இழுக்கும் காட்சியும், கத்தும் குரலிலும் திட்டும் காட்சிகளும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது X தளத்தில் வைரலாகி வருகிறது.
விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் இணைந்து அவரை கட்டுப்படுத்த முயன்ற பிறகு, போர்ட் ஆத்தாரிட்டி போலீசார் அந்த விமானத்துக்கு வந்தடைந்து, லீனா பேரியை கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, நியூயார்க் நகரக் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், விமானங்களில் பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Read more: முன்னாள் முப்படை வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்…! மத்திய அரசு அறிவிப்பு…!