எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தியது. இதையடுத்து, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் வட்டி உயர்வை அறிவித்தன. இந்நிலையில், நாட்டின் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து வகையான கடன்களுக்கு வட்டியை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதனால், எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் என பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவிகிதத்தில் இருந்து 7.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.