16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கும் புதிய திட்டத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில் அம்மாநில முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகளை சமூக ஊடகங்களில் உள்ள அடிமைத்தனத்தை உருவாக்கும் அல்காரிதங்கள், சைபர் தொல்லை, மனநல பிரச்சினைகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாப்பதாகும். நிபுணர்கள் கூறுவதாவது, இத்தகைய உள்ளடக்கங்கள் இளம் வயதினரிடம் பதட்டம், மனச்சோர்வு மற்றும் தூக்கக் கோளாறுகளை அதிகரிக்கச் செய்கின்றன.
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மொபைல் பயன்பாடு காரணமாக கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.. 10 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தினமும் 3 மணி நேரத்திற்கும் மேல் இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூ டியூப் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால் குழந்தைகளின் கவன திறன் குறைதல், கல்வி திறன் குறைவு மற்றும் சமூக உறவுகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பெற்றோரும் ஆசிரியர்களும் கூறுகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு திரை நேரம் (screen time) அதிகரித்ததால் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது: குழந்தைகளின் சிறுவயதை டிஜிட்டல் உலகம் கவர்ந்து விடாமல் காக்கும் “முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை” இதுவாகும் என்றார்.
சமூகத்தின் ஆதரவு அவசியம்
காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷாத் இதுகுறித்து பேசிய போது “ சிறிய குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது இன்று பல குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் கட்டுப்பாடின்றி தகவல்களைப் பெறும்போது அது அவர்களின் மன மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை பாதிக்கும் என்றார்.
மேலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு சமூகத்தின் ஒத்துழைப்பை பெற வேண்டும் என்றும், இதுபற்றி விரிவான ஆலோசனைகள் நடத்தி கொள்கை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடுமையான நடைமுறை விதிகள்
இந்த புதிய திட்டத்தின் படி, சமூக ஊடக தளங்கள் பயனர்களின் வயதை உறுதி செய்யும் முறையை கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆதார் இணைக்கப்பட்ட செயலிகள் மூலம் parental control பயன்படுத்த முடியும்.
இந்த விதிகளை பின்பற்றாத தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு தவறுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், பள்ளிகளில் “டிஜிட்டல் டிடாக்ஸ்” திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். போலீசார் சைபர் கஃபேக்கள் மற்றும் மொபைல் கடைகளை கண்காணித்து, 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடக அணுகலை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கீழ் ஒரு தனிப்பட்ட பணிக்குழு அமைக்கப்படும். அடுத்த மாதம் முதல் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக விளையாட்டு, வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் வாசிப்பு போன்ற ஆரோக்கியமான மாற்று செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களும் தொடங்கப்படும்.
இளைஞர்களை பாதுகாக்கும் விரிவான திட்டம்
இந்த திட்டத்திற்காக மாநில பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியையும் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் என்ற நோக்கத்துடன் கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலர் இந்த முடிவை முன்னோக்கிய (progressive) நடவடிக்கையாக பாராட்டியுள்ளனர். இது சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடக கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் ஒப்பிடப்படுகிறது.
ஆனால் சில செயலி உருவாக்குநர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
இந்த முடிவை விளக்கிக் கூறிய சித்தராமையா, “எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அல்காரிதங்களிடம் ஒப்படைக்க முடியாது. டிஜிட்டல் உலகிலிருந்து சிறிது விலகி, மனித உறவுகளை மீண்டும் உருவாக்க வேண்டிய நேரம் இது,” என்று தெரிவித்தார்.
Read More :


