தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும். அதனுடன், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (எஸ்எம்சி) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. அதன்படி, வருகைப் பதிவு செயலியில், கூட்டத்தில் பங்கேற்றவர், பங்கேற்காதவர் ஆகியவற்றுடன் கூடுதலாக ‘காலியிடம்’ என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால், கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க தேவையில்லை. ஒருவேளை, அவர்கள் விரும்பினால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டாம். அதற்கு மாறாக, செயலியில் காலியிடம் என்று குறிப்பிட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.