மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனே கலைக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து தனிப்படை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசீஸ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் அஜித்குமாரிடம் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை தான் விசாரணை நடத்திய போது அஜித்குமார் இறந்தார். இதனால் தனிப்படை மீது நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தனியாக தனிப்படைகள் என்று உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு தனிப்படையும் விசாரணை நடத்த கூடாது என்று அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புகார்கள் மீது விசாரணையை, சம்பந்தப்பட்ட காவல்நிலைய விசாரணை அதிகாரிகள் மட்டும் தான் நடத்த வேண்டும். தனியாக தனிப்படைகள் என்று உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு தனிப்படையும் விசாரணை நடத்த கூடாது என்று அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள் மற்றும் அனைத்து காவல் ஆணையர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், மாவட்ட வாரியாக எஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் கீழ் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை உடனே கலைக்க வேண்டும்.
அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் இனி காவல்துறையில் செயல்படக்கூடாது. அப்படி உயர் அதிகாரிகள் ஆலோசனையின்றி யாரேனும் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய வழக்குகளில் மட்டும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படியே சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.