மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மத்திய அரசு தனது தேசியக் கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதனை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர். மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. இது உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் இன்று வெளியிட்டார். பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை தாய்மொழி வழியிலான கல்வி அவசியம் என குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநில கல்விக் கொள்கை அறிக்கையானது உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சாத்தியம் உள்ள திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தனர்.