வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் உடல் எடையை குறைத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஜிரோதா நிறுவன சிஇஓ அறிவித்துள்ளார்.
பணியாளர்களுக்கான புதிய உடற்பயிற்சி சவாலை ஆன்லைன் தரகு நிறுவனமான செரோதா அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியம் தொடர்பான நடவடிக்கைகளின் நீண்ட பட்டியலில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நிதின் காமத் கூறுகையில், ”வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், நிறுவனம் விடுக்கும் உடற்பயிற்சி சவால்களை ஏற்று அதனை நிறைவேற்றும் பணியாளர்களுக்கு தாராளமான ஊக்கத்தொகை கிடைக்கும். மேலும், இதில் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ.10 லட்சம் வரை பரிசை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. புதிய உடற்பயிற்சி சவாலின்படி, தினமும் ஒருவர் ஒரு நாளைக்கு 350 கலோரியை எரிக்கும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினசரி இலக்குகள் நிறுவனத்தின் பிட்னஸ் பயிற்சி குழுவால் நிர்ணயிக்கப்படும்.

வீட்டில் இருந்து வேலை செய்து வருவதால் ஊழியர்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கும் ஒரு தொற்றுநோயாக தற்போது மாறி வருகிறது. அதிலிருந்து விடுவிக்க அவர்களது குடும்பத்தினரின் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.