மின்வாரிய அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் 19 மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் 75,978 பணியாளர்கள் பயன்பெறவுள்ளார்கள்.
மேலும், 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணி பலனாக 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் 62,548 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு 527 கோடியே 8 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையான 516 கோடியே 71 லட்சம் ரூபாயும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சிறு சங்கடமும் இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முடிந்ததாக” தெவித்தார். ஊதிய உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்த அமைச்சரிடம் பணி உறுதி செய்யப்படாத கேங்மேன் பணியாளர்கள் தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி முதலமைச்சர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.