ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உணவு வகைகளில் பருவகால சுவையான உணவுகள், பண்டிகை கால உணவுகள், விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பொருட்களும் உள்ளடங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தைகளுக்கான உணவுகள், ஆரோக்கிய உணவு விருப்பங்கள், ஊட்டசத்து மிக்க உள்ளூர் தயாரிப்புகள் உட்பட பயணிகள் விருப்பத்திற்கேற்ப உணவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த புதிய உணவு வகைகள் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.