பிரிந்து வாழும் தம்பதியரின் நீண்டகால திருமணத் தகராறை “மகாபாரத அளவிலான போராட்டம்” என விவரித்த இந்திய உச்ச நீதிமன்றம், அந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு ரூ.5 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஏப்ரல் 7 அன்று இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியது. “நடைமுறை ரீதியாக இந்தத் திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது. இரு தரப்பினருக்கும் இடையிலான இந்தத் தகராறு மகாபாரதப் போரின் நிலையை எட்டியுள்ளது. எனவே முழுமையான நீதியை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துவது அவசியம்” என நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கு, பம்பாய் உயர் நீதிமன்றம் 2024 செப்டம்பரில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. அதேவேளை, மனைவியிடமிருந்து ரூ.20 கோடி கோரி கணவர் தாக்கல் செய்த எதிர் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்தத் தம்பதியர் 2010 ஜனவரி 20 அன்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2016 அக்டோபர் 9 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களது இரண்டு சிறு குழந்தைகள் மனைவியின் பாதுகாப்பில் உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக நீடித்த இந்தத் தகராறு, ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு உரிமை, மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் போன்ற பல வழக்குகளாக பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டது.
இது மிகுந்த சிக்கலான மற்றும் விரோதமான நிலையை எட்டியதாகவும், குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. முன்னதாக, குடும்ப நீதிமன்றம் 2019 பிப்ரவரி 6 அன்று, கணவர் மாதம் ரூ.80,000 ஜீவனாம்சம், மனைவிக்கு ரூ.50,000 மற்றும் குழந்தைகளுக்கு தலா ரூ.15,000 கல்விச் செலவாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இந்த உத்தரவுகளை கணவர் தொடர்ந்து மீறியதால், நிலுவைத் தொகை ரூ.30 லட்சத்தைத் தாண்டியது.
இதையடுத்து, கணவர் திட்டமிட்டு ஜீவனாம்சம் வழங்காமல் தாமதப்படுத்தி வந்ததாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது. மனைவி உயர்கல்வி பெற்றவர், வேலை செய்யும் திறன் கொண்டவர் என்பதால் தன்னை நிதிப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கணவரின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், கணவர் தனது வணிகப் பதவிகளிலிருந்து விலகி, தனது வருமான விவரங்களை மாற்றியமைத்தது நம்பகத்தன்மையற்றதாகவும், பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சியாகவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. திருமணத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ததுடன், நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.



