கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிராம உதவியாளர் பணி என்பது தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு ஆகும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளர்களுக்கான வயது வரம்பு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கிராம உதவியாளர்களை நியமிப்பதற்கான வயது நிலைகள் குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையரகம் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் நேரடி நியமனம் மூலமாக கிராம உதவியாளா்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 39 ஆகவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர்களாக நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமும் இந்த வயது வரம்பு நிலையை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.