திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என அமித்ஷா விமர்சித்திருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு படையப்பா டயலாக் மூலம் பதிலளித்துள்ளார்.
சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
மேலும் “ சென்னையில் இருக்கக்கூடிய நாட்களில் அங்கிருக்கும் திட்டங்களை தொடங்கி வைப்பது, நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை ஆய்வு செய்வது, பணி ஆணைகளை வழங்குவது, நேரில் போக முடியாத திட்டங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பது என மக்களுக்காக தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் நான் எங்கே போனாலும், அன்போடு, உறவோடு நீங்கள் என்னை வரவேற்கிறீர்கள். என்னை முதலமைச்சராக பார்க்காமல், உங்களில் ஒருவராக, உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக பார்த்து அன்பை பொழிகிறீர்கள்.. இதை எல்லாம் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
திமுக அரசுக்கு கிடைக்கும் செல்வாக்கை பார்த்து வயிறு எரிகின்றனர். சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். ஆட்சியில் குறை சொல்லி, எதுவும் செய்யவில்லை, எந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை, வெறும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.
அமித்ஷா பேச்சில் தனது ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். ஒன்றிய திட்டங்களை மடைமாற்றி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை திமுக கிடைக்கவிடாமல் செய்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் உண்மை அது இல்லை. படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவரு தான் அவரு போட்டிருக்க சட்டை என்னோடது தான் என்ற வசனம் வரும். அதே போல, ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நாம் தான் நிதி கொடுத்து வருகிறோம். ஆனால் உள்துறை அமைச்சர் அப்படியே உண்மையை மாற்றி வருகிறார்.
அமித்ஷா அவர்களே 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன என்று பார்த்தீர்களா? ஆனால் அதே மதுரையில் பல திட்டங்களை முடித்திருக்கிறோம். இது தான் பாஜக மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.. 10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் என்பது மருத்துவமனையா? இல்லை விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? முறையாக நிதி ஒதுக்கினால் இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாமே. 3-வது முறையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் நீங்கள், தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்பு திட்டத்தை கொண்டுவந்தீர்கள்? இதற்கு மட்டும் பதில் சொல்லவே மாட்டீர்கள்..
கீழடியில் உள்ள சான்றுகளை கண்டுபிடித்து, அறிவியல் அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மற்றொரு மத்திய அமைச்சர் ஷெகாவத் கூறியிருக்கிறார். தமிழர்களின் தொன்மையை மறைக்கவும், அழிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர், இதை எல்லாம் கேள்வி கேட்க துணிச்சல் இல்லாமல், அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தலையாட்டி பொம்மை போல உட்கார்ந்திருக்கிறார். இவர்கள் தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் தான் தமிழ்நாட்டு மக்களும் இவர்கள் கூட்டணிய புறக்கணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷாவும் மற்றவர்களும் நேரடியாக சொல்கின்றனர். அது குறித்தும் எதுவும் பேசாமல் வாய் மூடி இருக்கிறார்கள். சொந்த கட்சியை அடமானம் வைத்தவர்கள் எப்படி மக்களுக்காக பேசுவார்கள்.. டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம். சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்.. திராவிட மாடல் அரசுக்கு மக்கள் இருக்கிறீர்கள்.. 2026 தேர்தலிலும் ஆதரவாக இருப்பீர்கள்.. எப்போதும் நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Read More : நெல் கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகளுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..