ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலை முன்னிட்டு அரசு உத்தரவின்படி இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அனைத்து விதமான டாஸ்டாக் கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.