கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் நல்ல நட்பாக மாறியிருக்கிறது. பின்னர் அந்தப் பழக்கமே நெருக்கமாக மாறி தனது பாலியல் தேவைகளுக்கு அந்த சிறுவனை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார் அந்த திருநங்கை. இதனால் அவரை சந்திக்கவே அச்சப்பட்ட அந்தச் சிறுவன் இவரிடம் இருந்து விலகியே இருந்திருக்கிறான். ஆனாலும் இவர் விடுவதாக இல்லை.
அந்த சிறுவனை செல்போனின் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய தேவைகளுக்காக அடிக்கடி துன்புறுத்தி இருக்கிறார். மேலும் அந்தச் சிறுவனை தம்பா நூர் பகுதிக்கு அழைத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மிகவும் அச்சமடைந்த சிறுவன் இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றனர். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை இது தொடர்பாக திருநங்கை சச்சு சாம்சனை கைது செய்து சிறையிலடைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆகியவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது . இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அளித்தனர். சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் திருநங்கைக்கு எதிராக ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஏழு வருட சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் தண்டனை சேர்த்து அனுபவிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.