மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதும் கூட. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆய்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து, 20 பேர் இறந்துள்ளனர். 1986 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் நாசா விண்வெளி விண்கலத்தில் 14 பேரும், 1971 சோயுஸ் 11 பயணத்தின்போது 3 விண்வெளி வீரர்களும் மற்றும் 1967இல் அப்பல்லோ 1 ஏவுதளத்தில் மூன்று விண்வெளி வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
நாசா 2025ஆம் ஆண்டு நிலவுக்கு ஒரு குழு அனுப்ப உள்ளது. மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. விண்வெளிப் பயணம் சகஜமாகும்போது, யாராவது இறந்துவிடக் கூடும். அப்படி விண்வெளியில் ஒருவர் இறந்தால், அவரது உடல் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு நாசா பதில் அளித்துள்ளது. விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ வல்லுநராக இம்மானுவேல் உர்கியேட்டா, விண்வெளியில் மரணம் எவ்வாறு கையாளப்படும் என்பதை விளக்கியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற பூமிக்கு அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லும் பயணத்தில் யாராவது இறந்தால், குழுவினர் சில மணிநேரங்களில் உடலை ஒரு காப்ஸ்யூலில் பூமிக்கு திருப்பி அனுப்பிவிடலாம். மரணம் சந்திரனில் நடந்தால், குழுவினர் ஒருசில நாட்களில் உடலுடன் வீடு திரும்பலாம். நாசா ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கான விரிவான நெறிமுறைகளை வைத்திருக்கிறது. விரைவாகத் திரும்ப வேண்டும் என்பதால் இறந்தவரின் உடலைப் பாதுகாப்பதைவிட மீதமுள்ள குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
300 மில்லியன் மைல் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும்போது ஒரு விண்வெளி வீரர் இறந்தால், அப்போதைய நடைமுறை வித்தியாசமாக இருக்கும். அப்போது, குழுவினர் திரும்பிச் செல்ல முடியாது. அதற்கு பதிலாக, பணியின் முடிவில் குழுவினருடன் உடல் பூமிக்குத் திரும்பும். இதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். குழுவினர் உடலை ஒரு தனி அறை அல்லது சிறப்பு பையில் பாதுகாத்து வைப்பார்கள். விண்வெளி வாகனத்தின் உள்ளே இருக்கும் நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடலைப் பாதுகாக்க உதவும். ஆனால், விண்வெளி நிலையம் அல்லது விண்கலம் போன்றவற்றில் யாராவது இறந்தால் மட்டுமே இது பொருந்தும்.
விண்வெளி உடை அணியாமல் ஒருவர் விண்வெளிக்குச் சென்றால் என்ன நடக்கும்? அவர் கிட்டத்தட்ட உடனடியாக இறந்துவிடுவார். விண்வெளியின் அழுத்தம் மற்றும் வெற்றிடம் காரணமாக சுவாசிக்க முடியாமல் போகும். மேலும் இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் கொதிக்கத் தொடங்கும். விண்வெளி உடை இல்லாமல் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்தில் நுழைந்தால் என்ன நடக்கும்? சந்திரனுக்கு வளிமண்டலம் இல்லை. செவ்வாய் கிரகம் மிகவும் மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட ஆக்ஸிஜன் இல்லை. எனவே அங்கும் மூச்சுத்திணறல், இரத்தக் கொதிப்பு போன்றவை ஏற்பட்டு விரைவாகவே உயிரிழக்க நேரிடும்.
விண்வெளி வீரர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பிறகு இறந்தார் என்றால், தகனம் செய்வதோ அடக்கம் செய்வதோ செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மாசுபடுத்தலாம். எனவே, குழுவினர் உடலை பூமிக்கு திரும்பும் வரை பாதுகாத்து வைப்பார்கள். உடலை என்ன செய்வது என்பது மட்டுமின்றி, விண்வெளியில் ஏற்படும் ஒரு மரணத்தை ஆய்வாளர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது பற்றி இன்னும் பல அறியப்படாதவை விஷயங்கள் உள்ளன என்றும் விண்வெளி மருத்துவர் இம்மானுவேல் உர்கியேட்டா தெரிவித்துள்ளார்.