தொழில்நுட்பம் மனித வாழ்வை முன்னேற்றம் நோக்கி இட்டுச் செல்லும் சக்தியாக உருவாகியுள்ள நிலையில், அதே தொழில்நுட்பம் மனிதர்களின் மனநிலையையும், உயிரையும் பறிக்கும் ஆயுதமாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு உருவாக்கப்படும் “மார்பிங்” என்ற நவீன அச்சுறுத்தல் இதற்கு சாட்சியாகும்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவம், செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ராகுல் பார்தி என்ற கல்லூரி மாணவனின் செல்போனுக்கு சாஹில் என்ற இளைஞன் மெசெஜ் செய்துள்ளார். ராகுலின் சகோதரிகள் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து ரூ. 20,000 பணம் கேட்டு அழுத்தம் தந்துள்ளார்.
இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனஅழுத்தத்தில் சாப்பிடாமல் தனிமையில் இருந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் மாத்திரைகளை விழுங்கி இருக்கிறார். இதையடுத்து மயக்க நிலைக்கு சென்ற அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்போன் உரையாடல்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவரது வாட்ஸ்அப் உரையாடல்களில், AI-உருவாக்கிய புகைப்படங்களும், மிரட்டல்களும் இருந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய தலைமுறை, இணையத்தில் தங்களின் புகைப்படங்களை எளிதில் பகிர்ந்து கொள்ளும் போக்கில் இருக்கின்றனர். ஆனால் அவையே உயிரை பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடும் என்பதை யாரும் சிந்திக்கவில்லை. AI மார்பிங் ஒரு “சைபர் குற்றம்”. இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள், விரைவான நடவடிக்கைகள் அவசியம்.



