பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனங்களை தெரிவித்தனர்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கையில் எடுத்த இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகினர். 60க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெளிவுப்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.
இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 பேர் தலைமையிலான குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, இந்திய பிரதிநிதிகளாக அவர்கள் பல குழுக்களாக பிரிந்து சென்று அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழுவினரை பிரதமர் மோடி விரைவில் சந்திக்க உள்ளார். இதன்படி வருகிற 9-ந்தேதி அல்லது 10-ந்தேதி டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற கூடும் என கூறப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, உயர்மட்ட கூட்டங்கள், உரையாடல்கள் மற்றும் பல்வேறு நாடுகளிடம் இருந்து கிடைத்த பதில்கள் உள்ளிட்ட முக்கிய முன்னேற்றத்திற்கான விசயங்களை பற்றி பிரதமரிடம் அந்த குழுவினர் விளக்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.