இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அடர்ந்த புகை மேகங்கள் எழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தெஹ்ரான் நகரின் பலப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்..
ஈரான் அரசு தொலைக்காட்சி வெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினாலும், ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இதுகுறித்து ஈரான் அரசு தரப்பில் உடனடி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஈரானின் அணு திட்டம் தொடர்பாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் அந்த நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் அவசர நிலை அறிவிப்பு
இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர், இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நாடு முழுவதும் அவசர நிலை அறிவித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும் என்ற சாத்தியம் இருப்பதால், பாதுகாப்புப் படைகள் முழுமையாக தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்
தெஹ்ரானில் வெடிப்பு ஏற்பட்ட அதே நேரத்தில், இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஈரான் தரப்பில் இருந்து ஏவுகணை தாக்குதல் ஏற்படக்கூடும் என்ற சாத்தியத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்களை முன்கூட்டியே தயார்படுத்தும் நோக்கில் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கினர்.
இந்த சம்பவம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது..
Read More : மார்ச் 1 முதல் புதிய விதிகள்..! இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் & டெலிகிராம் செயலிகள் இயங்காது..!



