மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள் நிறைந்தவை. அவற்றை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படைகள் முயற்சிக்கின்றன. நீண்ட காலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது. சமீபத்தில், அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, ‘எம் – 23’ கிளர்ச்சிப் படையினர், காங்கோவின் இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றினர். கிளர்ச்சிக் குழுவை ஒழிக்க காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டா ஆகிய இரண்டும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், 2019ல் ‘இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ குழுவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த ஏ.டி.எப்., எனப்படும் நேச நாட்டு ஜனநாயகப்படை தொடர்ந்து காங்கோவில் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு காங்கோவில் வடக்கு கிவு பகுதியில் உள்ள நிட்டோயோவில் குடியிருப்புவாசிகள் இறுதிச்சடங்கிற்காக சுடுகாட்டில் கூடியிருந்தனர். அப்போது ஏ.டி.எப்., கிளர்ச்சியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் கத்தியால் சரமாரியாக அங்கிருந்த பொதுமக்கள் 71 பேரை வெட்டிக்கொன்றனர். மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
“கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒரு இறுதிச் சடங்கில் இருந்தவர்கள்” என்று உள்ளூர் சிவில் சமூகத் தலைவர் சாமுவேல் ககேனி கூறினார், இந்தத் தாக்குதலில் குறைந்தது 14 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “அவர்களது வீடுகளில் உயிருடன் எரிக்கப்பட்டனர், மேலும் தப்பி ஓட முயன்ற மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று கூறப்படுகிறது,
AFP கணக்கின்படி, ஜூலை முதல் இடூரி மற்றும் வடக்கு கிவு முழுவதும் இந்தக் குழு 150க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளது.காங்கோவின் வடகிழக்கில் அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற ADF-ஐ சமாளிக்க உகாண்டா மற்றும் காங்கோ படைகள் இரண்டும் இப்பகுதிக்கு துருப்புக்களை அனுப்பியுள்ளன.