சமீபத்தில் தொடங்கப்பட்ட மைசூரு-சென்னை வந்தே பாரத் ரயில் மீதும் மாடு மோதியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் வந்தேபாரத் ரயில் சேவை சென்னை-மைசூரு இடையே தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இதுதான் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். மும்பை-காந்தி நகர், டெல்லி-இமாச்சல், டெல்லி-கத்ரா, டெல்லி-வாரணாசி என 4 சேவைகள் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவில் முதல் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வந்தே பாரத் ரயில் 4 முறை விபத்துக்குள்ளானது. ஒரு முறை காளை மாடு முட்டி விபத்துக்குள்ளானது. இரண்டாவது முறை எருமை மாடு முட்டி விபத்துக்குள்ளானது. மூன்றாவது முறையாக ரயில் சக்கரம் ஜாம் ஆனதால் நடுவழியில் நிற்கப்பட்ட ரயில் நீண்ட நேரம் பழுது பார்க்கப்பட்டு பின்னர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ரயில் மீதும் கன்று குட்டி ஒன்று முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கடந்த 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று அரக்கோணம் வந்தபோது கன்றுக்குட்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரம் பழுதாகி நின்ற ரயில் பின்னர் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டது.
மற்ற வந்தேபாரத் ரயில்கள் இதை விட நீளமானது. அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்கின்றது. சென்னை-மைசூரு இடையே தண்டவாளத்தின் நிலை காரணமாக இந்த வழித்தடத்தில் மட்டும் மிகவும் மெதுவாக இயக்கப்படுகின்றது. இதனால்தான் சதாப்தி ரயிலுக்கு இணையான வேகத்தைவந்தே பாரத் ரயில் பெற்றுள்ளது. இன்று நடந்த விபத்தில் கன்றுக்குட்டி உடல் நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கால்நடைகளால் விபத்து ஏற்படுவது இது 3-வது முறையாகும்.
நேற்று வெளியான தகவலில் கால்நடைகள் ரயில் மீது மோதாமல் இருக்க சில திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரயில் தடங்களில் நீளமான சுவர் எழுப்பப்படும் இதனால் கால்நடைகள் குறுக்கே வருவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.