நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார். இப்படம் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது.

இதன் காரணமாக ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். இதையடுத்து ‘இந்தியன் 2’ என்ற பெயருடன் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்க முடிவு செய்யப்பட்டது. அனிருத் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 2019 ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘இந்தியன்’ படத்தின் காவல்துறை அதிகாரியாக நடித்த நெடுமுடி வேணு கேரக்டருக்கு ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என படக்குழு முடிவு செய்தது.

நடிகர் கமலுடன் ஏற்கனவே ‘காக்கிச்சட்டை’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார் என்பதாலும், இந்த கேரக்டர் பரபரப்பாக பேசப்படும் என்பதாலும் அவருடன் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தின் திரைக்கதையைக் கேட்டு மகிழ்ந்து போன நடிகர் சத்யராஜ், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் அவர் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்குக் காரணம், சுமார் 15 நாட்கள் அவரது கால்ஷீட் தேவைப்படுவதால் பெரும் தொகை சத்யராஜ்-க்கு செலவு செய்ய வேண்டும் என்ற கவலையில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ‘இந்தியன்2’ படத்தில் சத்யராஜ் நடிப்பாரா? இல்லையா? என்பது தெரியும் என்று படக்குழு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க… இயக்குனராகும் விஜய் மகன்..!! முதல் படத்திற்கே இந்த ஹீரோதான் வேணுமாம்..!!