இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் “ பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்! படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” எனச் சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன்.
பேசினேன் என்பதை விட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்று தான் கூறவேண்டும். அது ஹிந்து நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என அமித்ஷா விமர்சித்திருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு படையப்பா டயலாக் மூலம் பதிலளித்திருந்தார். நேற்று முன் தினம் சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் “ சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். ஆட்சியில் குறை சொல்லி, எதுவும் செய்யவில்லை, எந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை, வெறும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.
அமித்ஷா பேச்சில் தனது ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். ஒன்றிய திட்டங்களை மடைமாற்றி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை திமுக கிடைக்கவிடாமல் செய்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் உண்மை அது இல்லை. படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவரு தான் அவரு போட்டிருக்க சட்டை என்னோடது தான் என்ற வசனம் வரும். அதே போல, ஒன்றிய அரசு திட்டங்களுக்கு நாம் தான் நிதி கொடுத்து வருகிறோம். ஆனால் உள்துறை அமைச்சர் அப்படியே உண்மையை மாற்றி கூறி வருகிறார்” என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : தூள்..! அரசு அலுவலகங்களுக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை…! தமிழக அரசு உத்தரவு