தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (48), மேகலா (33) தம்பதி. இந்த தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மகள் தர்ஷிகா (12) 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல், நேற்று அவரது குடும்பத்தினரின் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சடங்குகள் செய்வதற்காக சிறுமி புதைக்கப்பட்ட இடத்திற்கு உறவினர்கள் சிலர் வந்தனர்.
ஆனால் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது தோண்டப்பட்ட குழியில் சிறுமியின் உடை லேசாக கிழிந்து கிடந்தது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வருவாய்த்துறையினர் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்தனர். திருவிடைமருதூா் வட்டாட்சியா் சாந்தமீனா முன்னிலையில் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டியபோது, சிறுமியின் சடலம் இருந்தது. இதையடுத்து, வட்டாட்சியா் சிறுமியின் உறவினா்களிடம் உடற்கூறாய்வு நடத்த வேண்டுமா எனக் கேட்டாா்.
அதற்கு உறவினா்கள் தேவையில்லை எனக் கூறி மீண்டும் சடலத்தை அடக்கம் செய்து கலைந்து சென்றனா். பந்தநல்லூா் காவல் நிலையப் போலீஸாா் மாந்திரீகத்துக்காக சடலம் தோண்டி எடுக்கும் முயற்சி நடைபெற்றிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவத்தால் அரசடி கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.



