சிறுவன் ஒருவன் ஆபாச படம் பார்த்து விட்டு, 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பெமிதரா மாவட்டத்தில், கொத்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 10 வயது சிறுமி தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் நிலைய உயரதிகாரி ஆம்பர் சிங் பரத்வாஜ் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் 17 வயது சிறுவன் இந்த குற்றத்தை செய்தது தெரியவந்துள்ளது. சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்ததில், தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதற்கு அடிமையான சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறான் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நடந்த விஷயங்களை, சிறுமி தனது வீட்டாரிடம் செல்லிவிட கூடும் என்ற பயத்தில், கைக்குட்டையை வைத்து சிறுமியின் கழுத்தை நெரித்துள்ளான். அதன்பிறகு, சிறுமியை தூக்கில் மாட்டிவிட்டு பால்கனி வழியே தப்பி சென்றிருக்கிறான்” என காவல்துறையினர் கூறினர். இதைத் தொடர்ந்து பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் சிறுவனை ஆஜர்படுத்தினர். அதன்பின்னர், துர்க் மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.