வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என தொடர்ந்து எடுத்துரைத்து வந்தாலும் இந்த வழக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரால் உறவினர் ஒருவர், பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
கான்பூரை அடுத்த எடாவாஹ் மாவட்டத்தில் உள்ள அக்பர்புர் கிராமத்தில் அருண்குமார் (24) என்பவருக்கும், அவுரையா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முன்பே மணப்பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு கார் வழங்கப்பட்டுள்ளது. ஆயுதப்படையில் காவலராக இருக்கும் அருண்குமாருக்கோ கார் ஓட்டுவதில் பயிற்சி இல்லை. இருப்பினும் மணப்பெண் வீட்டார் கொடுத்ததால் அவர்களுக்காக காரை ஓட்டி பார்த்துள்ளார். அப்போது, காரை பின்னால் இயக்கும் போது பிரேக்கை அழுத்தாமல் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால், அங்கிருந்த உறவினர்கள் மீது கார் மோதியுள்ளது.
இதில் அருண் குமாரின் 35 வயது அத்தையான சர்ளா தேவி என்பவர் சம்பவ இடத்திலேயே காரில் நசுங்கி உயிரிழந்தார். அதேபோல 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், விபத்து நிகழ காரணமாக இருந்த மணமகன் அருண் குமாரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள காவல்துறை அதிகாரி ஏக்தில், “சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து புகார் வந்ததும் அருண் குமார் மீது கவனக்குறைவு, அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மரணத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.