திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் இப்போது அனல் பறக்க தொடங்கி உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் இருந்த அதே கூட்டணி திமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், இந்த கூட்டணியில் உள்ள தேமுதிக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியுள்ளது. பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்சனை நீடித்து வருவதால் அந்த கட்சியின் நிலைப்பாடு சரியாக தெரியவில்லை.
மறுபுறம் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என அறிவித்துள்ளது. அதே போல் விசிகவும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்..
இந்த நிலையில் திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதுகுறித்து பேசிய அவர் “ திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. நாங்கள் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. அவர் யார் என்பதை இப்போது நான் சொல்லப்போவதில்லை. அவர் பாஜக கூட்டணிக்கு வரும் போது அது தெரியவரும்.
அரசியலை பொறுத்த வரை, கூட்டணியில் எதுவேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே அவர் நம்முடன் கூட்டணியில் இருந்தவர் தான். வாஜ்பாய் காலத்தில் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இருந்தது. அந்த கட்சியின் தலைவர் என் சகோதரர் போன்றவர்.. எனவே திமுக தோற்பது உறுதியாகிவிட்டதால், வெற்றி பெறும் கட்சியுடன் தான் அனைவரும் கூட்டணிக்கு வருவார்கள்” என்று தெரிவித்தார்.
எல். முருகனின் இந்த கருத்து தான் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. ஆனால் திமுக கூட்டணி வலிமையாக இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கூடுதல் தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் திமுக கூட்டணி உடைய வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை ராஜ்ய சபா சீட் கொடுக்காததால் மதிமுக அதிருப்தியில் இருக்கலாம். இதை மனதில் வைத்து எல். முருகன் திமுக கூட்டணி உடையப் போவதாக பேசியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். திமுக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், அதனை உடைக்க முயற்சியாக எல். முருகன் இந்த கருத்தை கூறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Read More : அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம்.. ஷாக் கொடுத்த இபிஎஸ்!