விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் உள்ளதோடு, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சென்சார் சர்டிபிகேட் வழங்காமல் தாமதப்படுத்தியது.
தொடர்ந்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்படாததால் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது. தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியது. மறு தணிக்கை குழு திரைப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்ததது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்றைய தினம் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் தளபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழுப் படமும் இணையத்தில் லீக் ஆனது. இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்று இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க படம் இணையத்தில் லீக் ஆக விஜய் தான் காரணம் என ஒரு தரப்பு கூறுகிறது. படத்தை வைத்து தேர்தலில் அனுதாபம் தேடுவதற்காக விஜய் இப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் உண்மை விரைவில் வெளியாகலாம்.



