உத்தரப்பிரதேச மாநில பகுதியில் ஜான்சி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது பெற்றோர் திட்டியதால் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி மஹோபாவிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து ஜான்சி-எட்டாவா இன்டர்சிட்டி ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார்.
ரயிலானது எட்டாவாவை சென்றடைந்ததும், சிறுமிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு சிறுமி ரயிலிலேயே தங்குவதாக முடிவுசெய்துள்ளார். அதைத் தொடர்ந்து ரயிலில் சிறுமி தனியாக இருப்பதைக் கண்ட ரயிலைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர் ஒருவர், அச்சிறுமியிடம் அவரைப் பற்றி விசாரித்துள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு `உங்களது மகள் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிடுவார் நீங்கள் கவலைப்பட தேவையில்லை’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அச்சிறுமியிடம் அத்து மீறி பாலியலில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் சிறுமி தன்னுடைய பெற்றோரை தொலைபேசியில் அழைத்து, தன்னைக் கூட்டிச்செல்லும்படி கூறியிருக்கிறார். அங்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட நபர்மீது ரயில்வே காவல்துறையில் புகாரளித்தனர். புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைது செய்து, போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.