முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக, குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமண உதவித் தொகை தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண்கள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்பொழுது முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000 தொகையை வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வீதம் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. அந்த வைப்புத்தொகைக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு விதிகளின்படி, அரசு திட்ட பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்கள், ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கான விண்ணப்பத்தின் நகலை வைத்து இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.