திருமணத்தை மீறிய உறவு பல குடும்பங்களை சிதைத்து விடுகிறது. பலரது வாழ்க்கையில் புயலை வீசி செல்கிறது. கள்ளக்காதல் எனப்படும் திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கணவன், மனைவி இதில் யார் தவறு செய்தாலும், அது மற்றவரை மோசமாக பாதிக்கிறது. அந்த துரோகத்தை அவர்களால் தாங்கி கொள்ள முடியாமல் விபரீதமான முடிவையும் எடுக்கின்றனர். இது தவறான செயல் என்றாலும் அடிக்கடி நடக்கிறது. சிகரெட்டி குடித்தால் புற்றுநோய் வரும் என்பதை எப்படி அறிந்து கொண்டே அதனை செய்கிறார்களோ, அதுபோல் தான் சமூகத்தை சீரழிக்கும் என்று தெரிந்தே இந்த கள்ளக்காதலை செய்கிறார்கள்.
அந்தவகையில், பெங்களூரு கெங்கேரி அருகே ஹெக்கனஹள்ளியை சேர்ந்த பவித்ரா என்ற பெண் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே திருமணமான இவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில், பவித்ராவுக்கும் அவருடன் வேலை பார்த்து வந்த சேத்தன் கவுடா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ரா, சேத்தன்கவுடாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேத்தன் கவுடாவுக்கும், பூஜா கவுடா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பவித்ராவுக்கு கணவனின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த பவித்ரா, தனது கணவரையும், பூஜா கவுடாவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை.
மேலும் சேத்தன்கவுடா தனது கள்ளக்காதலி பூஜா கவுடாவுடன் சேர்ந்து மனைவி பவித்ராவை அடித்து, உதைத்து சித்ரவதை செய்திருக்கிறார். கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால் ஆத்திரத்தில் அவர்கள் பவித்ராவை அடிக்கடி சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பவித்ரா, கடந்த 2ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவித்ராவின் தாய் பத்மம்மா, அவரது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கெங்கேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பவித்ரா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், ”நான் சேத்தன் கவுடாவை கடந்த 2019 மே மாதம் 26ஆம் தேதி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டேன். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த எங்கள் இல்லற வாழ்க்கையில் பூஜா கவுடாவால் விரிசல் ஏற்பட்டது. சேத்தன் கவுடாவும், பூஜா கவுடாவும் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான், அவர்களை கண்டித்தேன். ஆனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினர். மேலும் அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். எனது சாவுக்கு கணவர் சேத்தன் கவுடாவும், பூஜா கவுடாவும் தான் காரணம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
இதுகுறித்து பவித்ராவின் தாய் பத்மம்மா கெங்கேரி போலீசில் சேத்தன்கவுடா, பூஜா கவுடா மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கள்ளக்காதலியுடன் சேர்ந்து சித்ரவதை செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.