சென்னை-பாண்டிச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகளும் அடிக்கடி நிகழும். இந்நிலையில், அமைச்சர் ஒருவரின் கார் மோதி புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து, மயிலாடுதுறை நோக்கி அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேகமாக சென்ற போது, எதிரே வந்த பைக் மீது மோதி மோதியது.

இதில், பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அந்த பைக்கில் பயணம் செய்த இளைஞர் உயிரிழந்த நிலையில், இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுமண தம்பதியினர் பைக்கில் கார் மோதியது தெரியவந்தது. இதில் கணவன் ஜான்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி ரூத் பொன் செல்வி சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்ற அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வர சென்னையில் இருந்து அவரது கார் சென்றது தெரியவந்தது. புதுமண தம்பதிகள், கடலூரில் உள்ள தங்களது வீட்டிலிருந்து சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.