கடலூர் மாவட்டம் பன்ரூட்டியில் அமைந்துள்ளது 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அதுல்யநாதேஸ்வரர் திருத்தலம். தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் 12வது தலமாக திகழும் இந்தப் புனித ஸ்தலம், ஆன்மிக வரலாறும் அற்புதங்களும் நிறைந்த இடமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் அறையணிநாதர் என அழைக்கப்படுகிறார்.
சைவ சமயத்தின் புகழ்பெற்ற நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், இத்தலத்திற்கு வந்து இறைவனைப் பாடி தொழுதபோது, ஈசன் ஜோதிரூபமாக காட்சி தந்ததாக தலபுராணம் கூறுகிறது. மேலும், இங்கிருந்தபடியே அண்ணாமலையார் பற்றியும் பாடி வழிபட்டார் என்பதும் இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும்.
‘அறை’ என்பது ‘பாறை’ எனப் பொருள். பாறை மீது அமர்ந்து அருள்பாலிப்பதால், இறைவன் “அறையணிநாதர்” என்ற பெயர் பெற்றார். புராண காலத்தில் இவரது பெயர் அதுல்யநாதேஸ்வரர் அதாவது “ஒப்பில்லாத இறைவன்” எனப் பொருள் தருகிறது. அம்பாளாக அருள்பாலிப்பவர் பொன்னழகி அம்மன், “சவுந்தர்ய கனகாம்பிகை” என்ற திருநாமத்திலும் போற்றப்படுகிறார்.
இத்தலம் மகாவிஷ்ணு சிவனை வழிபட்ட தலமாகவும் கருதப்படுகிறது. மகாபலியை பாதாள உலகத்திற்கு அனுப்பிய பின், விஷ்ணு இங்கு வந்து இறைவனைத் தொழுதார் என புராணங்கள் கூறுகின்றன. அவரைத் தேடி வந்த மகாலட்சுமி தாயாரும் இத்தலத்தில் தங்கியதாக நம்பப்படுகிறது.
அம்பாள் பொன்னழகி தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்து நன்றியை செலுத்துவது இத்தல வழக்கம்.
சனி தோஷம் நீக்கும் அரிய தலம்: இத்தலம் சனி பரிகார தலமாகவும் சிறப்பிடம் பெறுகிறது. இங்கு சனி பகவான் வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்தபடி அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் அருகில் இன்னொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாக அருள்பாலிப்பதும் விசேஷம். இவர்களை வணங்கினால் ஏழரை சனி, அஷ்டம சனி, சனி தசை பாதிப்புகள் எல்லாம் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.



