பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி அஸ்வின் (28). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், உயிர் பயத்தில் கடந்த சில மாதங்களாக புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, ரவுடி அஸ்வின் தனது இருசக்கர வாகனத்தில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனை சுதாகரித்துக் கொண்ட அஸ்வின், வண்டியை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அந்த மர்ம கும்பல் அஸ்வினை ஓட ஓட வெட்டியது. இதில், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஸ்வினை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரவுடி அஸ்வின் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணை நடத்தியதில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலு (22), வினோத்குமார் (24), சரத்குமார் (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.