உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,500 பேர் பலியாகினர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து அந்த இடம், சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில் பாதுகாப்பாக மாற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த OceanGate Expeditions என்ற ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனம், தனது நீர்மூழ்கி கப்பலில் சுற்றுலா பயணிகளை இந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் வாடிக்கையை கொண்டிருந்தது.
அதன்படி இந்நிறுவனத்துக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலாப் பயணிகளை சமீபத்தில் அழைத்துச் சென்றது. இந்நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட சில நேரத்திலேயே அட்லாண்டிக் கடலில் திடீரென மாயமாகி விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட OceanGate Expeditions நிறுவனமும் உறுதிபடுத்தி உள்ளது.இதையடுத்து நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாயமான நீர்மூழ்கி கப்பலில் அவசர காலத்தின்போது 90 மணி நேரம் உயிர்வாழ உதவும் அளவுக்கான ஆக்சிஜன் உள்ளதென தொடக்கத்தில் சொல்லப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கணிப்பின்படி அளவு இதன் அளவு 70 – 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் என்று மாறியிருக்கும் என கூறப்பட்டது.
இதனால் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றித் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து வழிகளும் ஆராயப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட OceanGate Expeditions நிறுவனம் தெரிவித்துள்ளது. கடலின் மேற்பரப்பிலிருந்து இங்கு சென்றடைய சுமார் 8 மணி நேரம் ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் கடலில் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்துவது சவாலானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.