மகளிர் உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரதிகா மற்றும் ஸ்மிரிதி இருவரும் 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு வலுவான தொடக்கம் கொடுத்தனர்.
மந்தனா 80 ரன்களிலும், பிரதிகா 75 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற மிடில் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய ஹர்லீன் தியோல் 38, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33, ரிச்சா கோஷ் 32 மற்றும் ஹர்மன்ப்ரீத் 22 ரன்கள் அடிக்க 48.5 ஓவரில் 330 அரன்கள் அடித்த இந்திய அணி ஆல் அவுட்டானது. 294/4 என வலுவான நிலையில் இருந்த இந்திய அணி கடைசி 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
331 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ்செய்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். இதில் போப் லிட்ச்பீல்ட் 40 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அடுத்து களமிறங்கிய எலிஸ் பெர்ரியுடன் அலிசா ஹீலி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அலிசா, இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
தொடர்ந்து சதம் விளாசி அசத்திய அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி, 21 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 142 ரன்கள் குவித்த நிலையில், ஸ்ரீசரணி பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்களும், தாலியா மெக்ராத் 12 ரன்களும் எடுத்தனர். எலிஸ் பெர்ரி 47 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. மேலும் உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை ஆஸிதிரேலிய அணி தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.