பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரின் அந்தரங்க உறுப்பை பெண் ஒருவர் பிளேடால் அறுத்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த இளம்பெண்ணின் கணவர் வெளியே சென்ற நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு சுமார் 10 மணியான நிலையில், வீட்டின் கதவை பெண் தாழிட மறந்து உள்ளே இருந்துள்ளார். அப்போது திடீரென உள்ள நுழைந்த 27 வயது வாலிபர் ஒருவர், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன பெண் அந்த நபரை தடுக்க முயன்றுள்ளார். தடுக்க முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் அருகே இருந்த ஷேவிங் பிளேடால் அந்த நபரின் அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார்.
அந்த நபர் காயமடைந்து துடித்து போகவே தப்பித்த அப்பெண் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பெண்ணின் குரல் கேட்டு கிராமத்து மக்கள் வருவதற்கு முன்பு அந்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். இருப்பினும் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக பங்கா டவுன் பகுதி காவல் ஆய்வாளர் சம்பு யாதவ் தெரிவித்துள்ளார்.