திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய அவர், “சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் செய்த ஓபிஎஸ் அவரிடமே சரணடைந்துள்ளார். இது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம். ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார். மேலும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து மற்றும் ஜெயலலிதாவின் அறையையும் காலால் உதைத்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ் பேச்சை இனி யாரும் நம்புவதாக இல்லை என்றும் , ஓபிஎஸ் என்ன சொன்னாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போல தான் இருக்கும்” என்றும் கூறினார். ஜெயலலிதாவின் உடல்நல குறைவில் இருக்கும் போது வெளிநாடு கொண்டு சென்று உரிய மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.
திமுக ஆட்சிக்கு வெளிப்படையான தன்மை இல்லை, மழை பெய்யும் போது தான் சாலை அமைக்கிறது அரசு. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விரைந்து துரிதமாக செயல்பட வேண்டும். அம்மா மருந்தகத்தின் மூலம் திமுக அரசு எந்த பயனையும் செய்வதில்லை,மக்களின் உயிரை பற்றி அரசு பொருட்படுத்தாமல் உள்ளது.
சொத்து வரியை ஏற்றியதுடன் , ஆவின் பால் பாக்கெட் விலை உயர்த்தியது தான் திமுக அரசு மக்களுக்கு வழங்கிய பரிசு. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது.
விளம்பரம் மற்றும் பொய்களாலே ஆட்சி நடக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ், உப்பிட்டவருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.