கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்னர் திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். உடனே பெற்றோரும், உறவினர்களும் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, செந்திலை கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி- ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார், மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தற்போது கலைந்து செல்லுமாறும் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்றைய தினம் ஆத்திரமடைந்த உறவினர்கள் செந்திலின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை தடுத்து கலைந்து போக செய்தனர்.