முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்தன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து பாமகவின் 4 எம்எல்ஏக்களும், பாஜகவின் ஒரு எம்எல்ஏவும் விலகி உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து தான் வாக்களிப்பார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
ஆனால் அடுத்ததாக பேசிய எஸ்.பி.வேலுமணி எங்கள் தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் உரைக்கு தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பதிலுரை அளித்தார். அவர் பேசுகையில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து பதிலுரை அளித்தார். நிச்சயமாக இந்த அரசு மதசார்பற்ற அரசாக செயல்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும் முந்தைய அரசின் முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தார். குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடுவதாக சொன்ன குற்ற சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் இல்லை குதிரை வேகத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
Read more: தவெகவுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு.. அவையில் எழுந்து நின்று இபிஎஸ் தரப்பு கூச்சல்..!



