விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் அமைந்துள்ள வானூர் மகா சனீஸ்வரர் கோயில், உலகிலேயே பெரிய சனீஸ்வரர் சிலையை கொண்ட ஆன்மிகத் தலமாக பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தக் கோயிலின் மிகப்பெரிய சிறப்பு – 27 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சியளிக்கும் மகா சனீஸ்வரர் சிலை.
நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் இந்த சனீஸ்வரர், மேல்கைகளில் வில் மற்றும் அம்பை ஏந்தியும், கீழ்கைகளில் முத்திரைகளுடன் பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக கருதப்படுகிறது. கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பே, 80 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மகா கும்பகோபுரம் பக்தர்களை மெய்மறக்கச் செய்கிறது. அதேபோல், 54 அடி உயரத்தில் அமைந்துள்ள மகா கணபதியின் முதுகுப் பகுதியும் முதலில் தரிசிக்கக் கிடைப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
பொதுவாக சனீஸ்வரரின் வாகனம் காக்கை என அறியப்படும் நிலையில், இக்கோயிலில் சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சியளிப்பது மிகவும் அபூர்வமான அம்சமாகும். மேலும், சனிப்பெயர்ச்சி நாளில் 80 அடி உயர கும்பகோபுரத்தில் 8,000 லிட்டர் எண்ணெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும் என்பது இந்தக் கோயிலின் விசேஷமாக கருதப்படுகிறது.
சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, வாஸ்து தோஷம் சரியாகும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. திருமணத் தடை, வியாபார சிக்கல்கள், குடும்ப பிரச்சினைகள் போன்றவை தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், கோயிலில் உள்ள கோசாலையில் கோதானம் மற்றும் கோபூஜை செய்து கோமாதாவின் அருளைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. சனிப்பெயர்ச்சி காலங்களில் இந்த மகா சனீஸ்வரரை தரிசிப்பது மிகுந்த பலனளிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Read more: Flash: ஜனநாயகன் படம் லீக் ஆன விவகாரம்.. 6 பேர் கைது..!



