செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். இந்த பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியவுடன் பழக்கடைகளில் அதிகமாக இதனை காணமுடியும். அதுமட்டுமல்லாமல் சாலையோர தள்ளுவண்டி கடைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடி என எல்லா வகை கடைகளிலும் மாம்பழ விற்பனை அமோகமாக நடைபெறும். இதனை வாங்குவதற்கும் பல்வேறு மக்கள் கூடுவார்கள். மாம்பழத்தை விவசாயிகள் இயற்கையாகவே பழுக்க வைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றனர்.
மாம்பழத்தில் பால் வடிந்தால் தரையில் ஒரு பழைய பேப்பரை விரித்து அதன் மீது பால் வடிந்த பழங்களை போட்டு வைத்தால் அது விரைவில் பழுத்துவிடும். அதிகமான மாம்பழங்கள் இருந்தால் அதை ஒரு இருட்டான அறையில் போட்டு அங்கு புகை மூட்டம் அளித்தால் எளிமையாக மாம்பழங்கள் பழுத்துவிடும். இது ஒரு பழமையான முறையாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக விவசாயிகள் அவரவர் பகுதிகளில் எந்த இலை எளிதாக கிடைக்கிறதோ உதாரணத்திற்கு ஆவாரம் இலை அல்லது வேப்ப இலை என எது கிடைக்கிறதோ அவற்றை அந்த மாம்பழங்களில் மூடி போட்டு பழுக்க வைக்கிறார்கள்.
ஆனால் சில இடங்களில் இதனை கார்பைடு கல் மூலம் வியாபாரிகள் பழுக்க வைக்கிறார்கள். இதனால் பல்வேறு வகையான ஆபத்து உடலில் ஏற்படும். ஏனென்றால் இதன் மூலம் பழுக்க வைத்தால் பல நாட்கள் வரை மாம்பழங்கள் பழுத்த மஞ்சள் நிறத்திலேயே காட்சியளிக்கும். விரைவில் கெட்டுப் போகாது. இதனால் உடலில் பல்வேறு கேடுகள் ஏற்படும். உதாரணத்திற்கு செயற்கையான முறையில் இதனை பழுக்க வைத்தால் அந்த பழங்களை நாம் சாப்பிட்டு வந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, தலை சுற்றல், குமட்டல் போன்றவை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை தேர்வு செய்வது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.