அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மக்கும் தன்மை கொண்ட மாதவிடாய் பேட்களை இலவசமாக வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பெண் மற்றும் ஆண் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்துப் பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு தீர்ப்பளித்தது. இந்த வசதிகளை வழங்கத் தவறினால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
“பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவு விலையில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை நடவடிக்கைகளுக்கான அணுகல், ஒரு பெண் குழந்தை பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் மிக உயர்ந்த தரத்தை அடைய உதவுகிறது. ஆரோக்கியமான இனப்பெருக்க வாழ்விற்கான உரிமை, பாலியல் ஆரோக்கியம் குறித்த கல்வி மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது,” என்று நீதிமன்றம் தெரிவித்தது..
மேலும் “சமத்துவத்திற்கான உரிமை, சமமான அடிப்படையில் பங்கேற்பதற்கான உரிமையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், வாய்ப்பு சமத்துவம் என்பது, பலன்களைப் பெறுவதற்குத் தேவையான திறன்களைப் பெற அனைவருக்கும் ஒரு நியாயமான வாய்ப்பு இருப்பதை அவசியமாக்குகிறது,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
டிசம்பர் 2024-ல் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்தது. அந்த மனுவில், பள்ளி செல்லும் மாணவிகளுக்கான மத்திய அரசின் ‘மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை’ நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று தாக்கூர் கோரியிருந்தார்.
இந்த நடைபெற்ற விசாரணையின் போது, பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை நடவடிக்கைகள் கிடைக்கவில்லை என்றால், அது “ஒரு பெண் குழந்தையின் கண்ணியத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனியுரிமை என்பது “கண்ணியத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தத் தீர்ப்பு, பள்ளியில் உதவி கேட்க “தயங்கும்” மாணவிகளுக்காகவே என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.. மேலும் “தங்கள் உடல் ஒரு சுமையாகக் கருதப்பட்டதால், பள்ளிக்கு வராமல் போனதற்குப் பலியான ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் நாங்கள் இதைத் தெரிவிக்க விரும்புகிறோம்: அது உங்கள் தவறு அல்ல. இந்த வார்த்தைகள் நீதிமன்ற அறைகளையும் சட்ட மறுஆய்வு அறிக்கைகளையும் கடந்து, பரந்த சமூகத்தின் அன்றாட மனசாட்சியைச் சென்றடைய வேண்டும்,” என்று கூறியது.
Read More : ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம்! நிர்மலா சீதாராமன் பெயரில் பரவும் வீடியோ.. உண்மை என்ன?



