இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி வெடித்ததில் எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது..
இந்தோனேசியாவில் சுமார் 130 எரிமலைகள் ஆக்டிவாக உள்ளன.. இதனால் அங்கு அடிக்கடி எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.. இந்த நிலையில் அந்நாட்டின் கலாச்சார தலைநகரான யோககர்த்தாவிற்கு அருகில் உள்ள ஜாவா தீவில் அமைந்துள்ள மெராபி எரிமலை நேற்று வெடித்தது.. இதானால் சுமார் 7 கிலோமீட்டர் (4.3 மைல்கள்) வரை சூடான சாம்பல் மற்றும் புகை பரவியது.. அப்பகுதியில் வீடுகள் முழுவதும் எரிமலை சாம்பல் படிந்துள்ளது.. எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய சூடான சாம்பல் மற்றும் பாறை, வாயு ஆகியவை காரணமாக அனல் மேகங்கள் உருவானதாக கூறப்படுகிறது.. இந்த அனல் மேகங்கள் 100 மீட்டர் உயரம் வரை காற்றில் உயர்ந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் ” அபாயகரமான பகுதியில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.. சாம்பலில் இருந்து மற்றும் எரிமலை சேற்றில் இருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், குறிப்பாக எரிமலைக்கு அருகில் மழை பெய்தால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..
2010ல் மெராபி எரிமலையின் மிகப்பெரிய வெடிப்பில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. சுமார் 280,000 மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..