எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் குறித்த சில பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்காளர் பட்டியலில் பல போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரே நபர் பல இடங்களில் வாக்களிக்கும் நிலை தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆதாரமாக, சில வாக்காளர் பட்டியல் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். மேலும், பெங்களூரில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 50க்கும் மேற்பட்டோர் பெயர்கள் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலை கிளப்பியது. ராகுல் காந்தியின் கூற்றுக்கு தொடர்ந்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக பல யூடியூப் சேனல்கள் பல வீடியோக்களை பதிவிட்டனர். இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது, வாக்கு திருட்டு குற்றச்சாட்டை அவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். மேலும், “வாக்கு திருட்டு என்ற சொல்லே அரசியலமைப்பிற்கு எதிரானது” எனக் கடுமையாக சாடினர். அதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் வாக்காளர் பெயர் நீக்கம் குறித்த போலி தகவல்கள் பரவுவதாக உண்மை சரிபார்ப்பு குழுக்கள் கண்டறிந்துள்ளன. இதையடுத்து, அந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், அந்த வீடியோக்களை வெளியிட்ட யூடியூப்பர்களே தங்களது காணொளிகளை தாமாகவே அகற்றினர்.