ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், ஈரானுடன் முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையிலும், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளது என்பது தெரிகிறது.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், போரில் இருந்து அமெரிக்கா “மிக விரைவில் வெளியேறும்.. இரண்டு வாரங்களுக்குள், ஒருவேளை இரண்டு வாரங்கள், அல்லது மூன்று வாரங்கள்.. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு முன்பு தங்கள் வேலையை முடித்து வருகின்றன” என்றும் அவர் மேலும் கூறினார்.
ஈரான் போர் குறித்த ‘முக்கியமான புதிய தகவலை’ அவர் பகிர்ந்துகொள்வார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ள நிலையில், அவரது உரைக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 28 அன்று தொடங்கி, மத்திய கிழக்கு முழுவதும் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தற்போதைய போருக்கு மத்தியில், டிரம்பின் இந்தப் புதிய கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. இதற்கு முன்னதாகப் போரைத் தீவிரப்படுத்துவதாக பல முறை டிரம்ப் அச்சுறுத்திய போதிலும், அமெரிக்க ஜனாதிபதி இப்போது வெளியேறும் உத்தியைக் குறிப்பதாகத் தெரிகிறது.
“நாங்கள் ஈரானை விட்டு வெளியேறினால் மட்டும் போதும், நாங்கள் அதை மிக விரைவில் செய்வோம், அவர்கள் வீழ்ந்து விடுவார்கள்,” என்று கூறிய டிரம்ப், உலகளாவிய எரிபொருள் விலைகள் தணிவதைப் பொறுத்து படைகளைத் திரும்பப் பெறும் சாத்தியமான முடிவை இணைத்தார்.
அமெரிக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுடன் ஒரு இராஜதந்திர ஒப்பந்தம் ஒரு முன்நிபந்தனை அல்ல என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தினார். “அவர்கள் என்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டியதில்லை.. ஈரானின் அணுசக்தித் திறன்கள் போதுமான அளவு பலவீனமடைகின்றனவா என்பதைப் பொறுத்தே படைகளைத் திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
“அவர்கள் கற்காலத்திற்குத் தள்ளப்பட்டு, அவர்களால் அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் உணரும்போது, நாங்கள் வெளியேறுவோம்,” என்று கூறிய அவர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை விட, இராணுவத்திற்கே முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு முழுவதும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் டிரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. எனினும் இன்றும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல்கள் தொடர்கின்றன, அதே நேரத்தில் ஈரான் தொடர்புடைய தாக்குதல்கள் வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்தன, இதில் குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் தீயை ஏற்படுத்திய ஆளில்லா விமானத் தாக்குதலும் அடங்கும்.
இதனிடையே, அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் பதற்றம் அதிகமாகவே உள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் விநியோகத்தைச் சார்ந்துள்ள நாடுகளை, “உங்கள் சொந்த எண்ணெயைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது, உலகளாவிய எரிசக்தி வழித்தடங்களைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் பங்கு குறைக்கப்படுவதைக் குறிக்கிறது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், வரவிருக்கும் நாட்களை “முடிவெடுக்கும்” நாட்கள் என்று அழைத்தார், அதே நேரத்தில் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு மேலும் இராணுவ நடவடிக்கைகளை அவர் நிராகரிக்கவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஈரானுடனான கருத்து வேறுபாடா?
டிரம்ப் முன்மொழிந்த காலக்கட்டம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் உள்ள கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. ஏனெனில், ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று நெதன்யாகு கூறியிருந்தார்.. ” இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை… பயங்கரவாத ஆட்சியை நாங்கள் தொடர்ந்து நசுக்குவோம்,” என்று நெதன்யாகு கூறினார்,
மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கான உத்தரவாதங்கள் இருந்தால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு விருப்பம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஸ்கியான் கூறினார்.



