தமிழகத்தில் சென்ற ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி இருக்கின்ற தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பல பகுதிகளில் 100 டிகிரி பாரான்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இந்த சூழ்நிலையில், வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.
இதனால் தேனி மாவட்டத்தின் வெப்பம் கடுமையான நிலையில், வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென்று வானிலை மாறி கூடலூர், கம்பம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், லோயர் கேம்ப், பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை நீடித்தது. அதன் பிறகு இரவு வேளையிலும் மழை மீண்டும் பெய்ய தொடங்கியது இரவு வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகவும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதிகளிலும் கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது சற்று தணிந்துள்ளது.