வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறைக்கு இடையே, நாட்டை பாதிக்கக் கூடிய இன்னொரு முக்கிய பிரச்சினையும் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது ஒரு மாதத்திற்கு வங்கதேசத்தில் காண்டம் (Condom) விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காண்டம் என்பது வங்கதேசத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமாகும். இப்படியான நிலையில், அதற்கான தட்டுப்பாடு உருவாவது பொதுச் சுகாதாரத்திற்கும், குடும்ப நலத்திட்டங்களுக்கும் பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த தட்டுப்பாடு உருவாகும் நேரத்தில் நாட்டின் மொத்த மகப்பேறு விகிதம் (Total Fertility Rate – TFR) உயர்ந்துள்ளதாக பதிவாகியிருப்பது கூடுதல் கவலை அளிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கருத்தடை சாதனங்களின் இருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது நிதி பற்றாக்குறை மற்றும் பணியாளர் தட்டுப்பாடு காரணமாக, இன்னும் 38 நாட்களுக்குள் காண்டம் கையிருப்பு முழுவதும் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, வங்கதேச அரசின் குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்தும் குடும்ப திட்ட இயக்குநரகம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கு காண்டம்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அரசின் குடும்ப திட்ட இயக்குநர்கம் நாடு முழுவதும் உள்ள துறைத்தள பணியாளர்கள் மூலம் ஐந்து வகையான கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கி வருகிறது. காண்டம், வாய்மூலம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், கருப்பை உள் சாதனங்கள், ஊசி மூலம் செலுத்தும் கருத்தடை மருந்துகள், இம்ப்ளாண்ட்கள் போன்றவை வழங்கப்படுகின்றன..
இந்த நிலையில் காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகள் பாதிக்கப்படுவதுடன், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வங்கதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களின் விநியோகம் கடுமையாக குறைந்துள்ளது.
காண்டம் விநியோகம் – 57% குறைவு
மாத்திரைகள் – 63% குறைவு
கருப்பை உள்ளமைப்பு கருவி – 64% குறைவு
ஊசி மூலம் செலுத்தும் கருத்தடை – 41% குறைவு
இம்பிளான்– 37% குறைவு
தற்போது உள்ள இருப்பு நிலை (2025 டிசம்பர் 11 நிலவரப்படி)
காண்டம் – 39 நாட்களுக்கு மட்டும்
இம்பிளாண்ட் – 33 நாட்களுக்கு
ஊசி மூலம் செலுத்தும் கருத்தடை – 45 நாட்களுக்கு
வாய்வழி மாத்திரைகள் – 5 மாதம் 18 நாட்களுக்கு
ஊசிகள்– 6 மாதம் 15 நாட்களுக்கு
இதனால் குறிப்பாக காண்டம் மிகவும் விரைவில் தீர்ந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத் திட்ட துறையின் விநியோகப் பிரிவு இயக்குநர் அப்துர் ரஸ்ஸாக் பேசிய போது “ தற்போது உள்ள கொள்முதல் தொடர்பான ஒரு சட்டப் பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே புதிய சரக்குகள் வாங்க முடியும். ஆனால் அந்த பிரச்சனை நீடித்தால், காண்டம் முழுவதுமாக தீர்ந்து, குறைந்தது ஒரு மாதத்திற்கு மக்கள் எந்த வசதியும் பெற முடியாத நிலை உருவாகும். களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைவாக இருப்பதால் விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்த்தல் சட்ட சிக்கல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்கள் சாதனங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பையும் வகிக்கிறார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய ஆய்வு ஒன்றில், மக்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் அளவு குறைந்துள்ளது.. நவீன கருத்தடை வசதிகளை பெறுவதும் சிரமமாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் உயரத் தொடங்கியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதனால், கருத்தடைப் பொருட்களின் தட்டுப்பாடு வங்கதேச மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வங்கதேசத்தில் மொத்த மகப்பேறு விகிதம் (Total Fertility Rate – TFR) கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாடு அமைந்துள்ளது.



