சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பாக, என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் முடித்திருப்போம். சென்னையில் காவல்துறை அனுமதி இல்லை. எனவே, இங்குள்ள 20 தொகுதிகளில் மட்டும் மக்களை உள் அரங்கு கூட்டங்களில் சந்தித்து வருகிறோம். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு பல்லடத்தில் நடைபெறவுள்ளது” என்றார்.
அப்போது நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் நேரத்தில் சிலர் அந்தக் கட்சியில் இணைவார்கள். சிலர் இந்த கட்சியில் இணைவார்கள். இது புதிதல்ல. கௌதமி ராஜபாளையத்தில் போட்டியிட கட்சி வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததாகவும், ஆனால் வாய்ப்பு தரவில்லை என்று சொல்லியிருந்தார். இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சில விஷயங்களை வெளிப்படையாக வெளியே பேசுவது நல்லதல்ல.
பிரதமர் தமிழக வருகையின்போது இன்னும் நிறைய பேர் பாஜகவில் இணையவுள்ளனர். பாஜகவில் இருந்து மாற்றுக் கட்சிக்கு செல்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். அதேபோல், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தால், அவர்களுடைய பழைய கட்சியைக் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று கட்சியினரிடம் நான் கூறியிருக்கிறேன்” என்றார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து குறித்த கேள்விக்கு, “தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. பாஜகவுக்கு வந்துள்ள 48 சதவீத தொகை தேர்தல் பத்திரம் இல்லாமல் வந்துள்ளது. இந்தியாவில் பாஜக மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்து, இந்தக் கட்சிக்கு 10 ரூபாய் கொடுத்தால், அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு ஒரு மாநிலத்துக்கு சராசரியாக ரூ.212 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 5,500 பேருக்கும் காசோலையில் நிதி வழங்கினோம். இதுபோல் செய்ததாக திமுகவோ, வேறு ஏதாவது மூத்த கட்சிகளோ, இல்லை தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கட்சி சொல்ல முடியுமா? எனவே, எங்களைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பால் இழப்பு ஒன்றும் இல்லை” என்றார்.